100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதிய பிரச்னை
கீழ்பென்னாத்தூர் அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சரியான ஊதியம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீக்களுர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 132 ரூபாய் ஊதியாகமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சென்ற மாதம் 60 ரூபாயும், இந்த மாதம் 40 ரூபாயும் மட்டுமே ஊதியமாக கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து கீக்களுர் ஊராட்சி மன்ற தலைவரிடம் விளக்கம் கேட்டபோது சரியான விளக்கம் எதுவும் தெரிவிக்காததால் ஆத்தரமடைந்த கிராம மக்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் போராட்டம் குறித்து விரைந்து வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாலை மறியலை கைவிடும்படி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சரியான ஊதியத்தை பெற்றுதருவதாக போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கீழ்பொன்னாத்தூர்- அவலூர்பேட்டை இடையே ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
